ஓம் ஸ்ரீ குருவே துணை!

190

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

17•04•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(291) மனிதனே புனிதன்—
ஓம் ஸ்ரீ குருவே துணை!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மனதில் தைரியம் மிக்கவர்களை எந்தவிதமான தீயசக்திகளும் வந்து அணுகிடாது. ஆத்ம சாதனை செய்து வருபவர் களுக்கு எதனையும் நேராக அனுபவித்து அறியும் மெய் ஞானமே உண்டாகிறது. இதனை உண்மை ஞானம் எனவும் கூறுவர். அறியாமையாகிய இருளின் பிடியில் இருந்து, அறிவாகிய ஒளியின் ஆளுகைக்கு வரும்போது ஒருவித உணர்வு மூலாதாரத்தில் இருந்து சிரசினை வந்தடையும். இதைத்தான் இறைசக்தியுடன் லயிக்கும் சுகமான ஆனந்த அறிவு என்று ஆன்றோர் கூறுவார்கள். இதனைப் பெற்றவர்களுக்கு காரண, காரிய உண்மைகளை அறியும் அறிவு சிறப்புறுகின்றது. தேவைப்படும் போது இந்த ஆற்றல் சக்தி தேகத்திலும் வெளிப்படும் போது கற்பனைக்கு எட்டாத சக்தியாக வெளிப்பட்டுச் செயலுறும்!
தன்னைத் தாக்க வந்த கள்வனை இப்படித்தான் அதீத ஆற்றல் சக்தியாக வெளிப்பட்டுத் தற்காத்துக் கொள்ளும் உணர்வின் அறிவாய்த் தோன்றியது. காரியம் என்பது உடலினில் செயற்படும் அறிவு எனவும், காரணம் என்பது தியானத்தால் உணரும் ஆகாயம் எனப்படும் சித்தத்தின் அறிவாகும். தியானம் செய்து வருபவர்கள் இதனை நன்கு அறிவர்.

திடீரெனத் தனக்கு எதிர்த் தாக்குதல், உடல் வலிமை குறைவாய்க் காணப்படும் ஒரு பெண்மணியிடமிருந்து வந்தது மில்லாமல், அதனைத் தடுக்க வேண்டிய தனது ஆற்றலும் வலு விழந்து போனதால், கள்வன் நிலைகுலைந்து போனான். காரண காரியமாகிய உணர்வின் பிடியில் இருந்து தப்பிப் பிழைத்தால் போதும் என்கின்ற நிலைக்கு வந்தும் விட்டான். தெய்வீக தியான சக்தியின் ஆற்றல் முன்பு நிற்க முடியாமல் கள்வன் கத்திக் கதறியழுதான். விடுபடும் முயற்சியில் அந்தக் கள்வனின் கத்தி தனது கரத்தினில் பாய்ந்து, ரத்தம் ஒழுகுவதையும் பெருட்படுத் தாமல், அவன் கரங்களைப் பிடித்துத் தூக்கிச் சமையலறைச் சுவற்றில் அவனை மோதி யடித்தார். சுவற்றில் மோதி விழுந்த கள்வனுக்குத் தப்பிக்கச் சந்தர்ப்பம் வாய்ந்தது என எண்ணி, கதறி அழுது கொண்டே வெளியே வீதியில் இறங்கி ஓடியே போனான். “திருடனைப் பிடியுங்கள்” என சப்தமிட்ட படியே வெளியே வந்த டாக்டரின் துணைவியாரின் கரங்களில் வழிந்து ஓடும் ரத்தப் பெருக்கை, சப்தம் கேட்டுக் கூடிவிட்ட ஜனங்கள் சொல்லிய பிறகே தெரிந்து கொண்டார்கள். பிறகு முதலுதவிச் சிகிச்சையை மேற் கொண்டார்கள். டாக்டரும் சேதி கேள்விப்பட்டு விரைந்து வந்து சேர்ந்தார். இதனை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் தியானசக்தியை முறையாகப் பயின்று வந்தால், எதனையும் வெல்லும் ஆற்றல் சக்தியால் அது வெளிப்பட்டு நமக்கு உதவியும் செய்யும் என்பதற்கே!

நமது சுவாமி அவர்களிடம் அன்பால் விடை பெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார். இப்படி வெளியூர்ப் பயணங்கள் மேற் கொள்ளும் போது, சுவாமி தனது மனைவி மக்களை சோமனூரில் தனது மாமனாரிடம் ஒப்படைத்து விட்டே சென்று வருவார். அவ்வூரில் திரு.பாஸ்கரன் அவர்கள் நமது சுவாமி அவர்களைப் பெற்ற தாய் தந்தை போலும் எண்ணி தவம் செய்து கொண்டிருந்தார். திரு.பாஸ்கர் அவர்களுடன் நெருங்கிப் பழகிய நண்பர்களுக்கு மட்டுமே அவரின் தெய்வீகம் தெரிய வரும். சுவாமி அவர்கள் மதுரை வரும் போதெல்லாம் திரு. பாஸ்கரன் அவர்களின் தியானம் பற்றியும், அவருக்குள் ஏற்படுத்திக் கொண்ட ‘ஸ்ரீ ஈஸ்வர பந்தம்’ பற்றியும் குறிப்பிடுவார். அவரது மைத்துனர் திரு.பசுபதியைப் பற்றிக் குறிப்பிடும்போது, “இன்று குழப்பத்தின் உச்சகட்டம். பின்னால் தெளியும் மன வளத்தின் மிச்சசொச்சம்” என்ற போது ஒன்றும் புரியவில்லை. சுவாமி சொல்லி விட்டார் என்றால் அதன் உண்மைகள் என்றேனும் வெளிப்பட்டே தீரும். சுவாமிகள் வரலாற்று ஏட்டில் அவ்வப்போது தியான நண்பர்கள் தங்களின் கருத்துக்களைப் பதிய வேண்டும் என்று விரும்பி வேண்டிக் கேட்டுக் கொண்டனர். அதன்படி திரு.பாஸ்கர் அவர்கள் தமது கருத்தைப் பதிவு செய்கின்றார்கள். சுவாமியுடன் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவ உண்மைகள் வெளிவருவதனால் இன்னும் நமக்கு தெய்வீக நம்பிக்கையும் வளர்ச்சி பெறும் என்று கருதுகிறேன்.தொடர்ந்து வரலாறு படித்து அறியும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதுவும் நன்மைக்கே!

நமது பரிகார ஸ்தலத்தின் தலைமைக் குருக்களாக விளங்கும் திரு.பாஸ்கரன் அவர்கள் ஆசாரம் மிக்க, பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்து , வெள்ளை கணபதியை தங்களின் இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தவர். தெய்வீக பக்தி மிகுந்த இவரின் ஞான தாகம் அளவிட முடியாதது. பகவானைத் தேடிக் கண்டு கொள்வேன் என்று, பசி, தாகம் எல்லாம் மறந்து தியானத்தில் மூழ்கிக் கிடந்தவர். ஞான குரு தவத்திரு வேணுகோபால சுவாமி அவர்களின் உபதேசத்தை ஏற்றுக் கொண்டவர். இவரைப் பின்பற்றி இவருடைய நண்பர்களும் ஞானகுரு காட்டிய வழியில் பயணம் மேற்கொண்டனர்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button